Monday, January 17, 2011

4. நினைவு

குளித்து
புத்தாடை உடுத்தி
வந்தோர்க்குக் காட்சி தந்து
கூட்டம் தொடர 
ஊர்வலம் கிளம்பிப் 
பாதி தூரம் சென்றபின் 
விட்டுப்போன விஷயங்கள்
நினைவுக்கு வர 
மீண்டும் போய் எடுத்து வர
முயன்றபோது முடியவில்லை 
கீழே  நாலு பேர்.  

 'புதிய பார்வை' ஜனவரி, 1993 இதழில் வெளியானது. எழுதியவர் : விஜயசாரதி.

3. அழகு

காதளவோடிய கண்கள் அவளுக்கென்று
காதலித்தபோது கூறி மகிழ்ந்தான்
காதுவரை கிழியும் வாயும்  உண்டென்று
கல்யாணத்துக்குப் பின்பு கண்டறிந்தான்.


கல்கி   8.6.1975  இதழில் வெளியானது. எழுதியவர்: விஜயசாரதி.

Sunday, January 9, 2011

2. வயது

பள்ளிப்படிப்பை முடித்ததும்
யார் யாருக்கோ லஞ்சம் கொடுத்துப்
பட்டப்படிப்பில் சேர்ந்து
பரீட்சைகள்  பல எழுதி
பாஸ்  செய்து
படிகள் பல ஏறி
சான்றிதழ்கள் நகலெடுத்து
தட்டச்சுக்குப் பணம் இறைத்து
பலரைப் பார்த்துப் பல்லிளித்து
போகாத இடமெல்லாம் போய்க் கேட்டு
வேண்டாத தெய்வங்களுக்கெல்லாம் வேண்டுதல்கள் செய்து
ஏமாற்றங்கள் பலவும் தாங்கி
சளைக்காமல் முயன்று முயன்று
கஜினி முகமதைப் புறம் காட்டியபின் 
கடைசியில்
ஒரு நாள்
வேலையும் கிடைத்தது.
மறுநாளே ரிடையர் ஆகி விட்டான்.