இரண்டு மனம் வேண்டுமாம்*
ஏங்கினார் கவிஞர்.
அவரிடம் இல்லை போலும்!
என்னிடம் இருக்கிறது:
கொள்கை வகுத்து,
திட்டமிட்டு,
முறையாகச் செயல்படத்
தூண்டும் மனம் ஒன்று.
சோம்பலை வளர்த்து,
பொழுது போக்கில் லயித்து,
நேரத்தை விரட்டி,
திட்டங்களைத் தகர்க்கும்
இரண்டாவது.
*"இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்."
'வசந்த மாளிகை'படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பாடல்.
தகுதி இல்லாதவரைப்
பதவியும், பெருமையும்
வலுவில் வந்தடைவது
கெட்டு விட்ட காலத்தின்
அட்டூழியம் -
அன்றாட உணவுக்கே போராடும்
எனக்கு
செல்வத்தின் சீர்களான
சர்க்கரை நோயும்,
ரத்தக் கொதிப்பும்
வந்திருப்பது போல்!